அரூர், மார்ச் 26: அரூரில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய விவசாயிகள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாலகபாடி ஓம்சக்தி மாரியம்மன் கோயில் திடலில் 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் ஒப்படைப்பது, விவசாய நிலங்கள், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது, தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் வாச்சாத்தி விஏஓ சிங்காரவேலன், கோபிநாதம்பட்டி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது, தேர்தலை புறக்கணிப்பதாக கூறி அரசுக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன்பேரில், விவசாயிகளான சந்திரகுமார், வேலு, வெங்கடேசன், அய்யாவு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.