மயிலாடுதுறை, ஜூன் 21: மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர், கடைமடை பகுதியில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு வந்தடைந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டார். இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி விக்ரமல் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர்தேக்கியில் வந்தடைந்தது. காவிரியில் முதல்கட்டமாக 682 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நீர்தேக்கியில், தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது, காவிரி துலாக்கட்டத்திற்கு வந்த காவிரி நீருக்கு, துலாகட்ட பாதுகாப்பு கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொங்கி வந்த காவிரியில் விவசாயிகள் மலர்தூவி வணங்கினர், கிராமிய நாடக கலைஞர்கள் விநாயகர், சிவன், அகத்தியர், வேடம் அணிந்து கொண்டாடினர். தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மேட்டூர் அணையின் விதிகளின்படி காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக மேலையூர் கடைமுகப்பதிக்கு காவிரிநீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன்படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது கடைமடை க்கு தண்ணீர் வந்தது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.