அருப்புக்கோட்டை: கருப்பு பூஞ்சை தொற்றுக்கு மதுரையில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய அருப்புக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி திடீரென மரணமடைந்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பொன்மணி (70). இவர் மே 30ம் தேதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கருப்பு பூஞ்சை தொற்றுடன் சிகிச்சைக்கு வந்தார். உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர் சிகிச்சையிலிருந்த பொன்மணி நோய் தொற்று குணமானதால் நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு வந்தார். நேற்று காலை முதலே கடுமையான தலைவலி, பல் வலி இருப்பதாகக் கூறிய பொன்மணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.